world

img

அமெரிக்கப்படையை விரட்டியடித்த சிரியா மக்கள் - சட்டவிரோத ஊடுருவல் தொடர்கிறது

டமாஸ்கஸ், நவ.2- சிரியாவின் டேய்ர் அல் ஜார் பகுதி வழியாக செல்ல முயன்ற அமெரிக்கப் படைகளை வழிமறித்த சிரியா மக்கள், திரும்பிப் போகுமாறு வலியுறுத்தியதால் வேறு வழியின்றி வந்தவழியாகவே படைகள் திரும்பிச் சென்றன.

சிரியாவின் சில பகுதிகளை அமெரிக்கப் படைகள் ஆக்கிரமித்துள்ளன. தீவிரவாதிகளை ஒடுக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டு சிரிய அரசின் ஒப்புதல் இல்லாமலேயே முகாம்களை அமைத்துள்ளன. இந்தப் படைகள் பலமுறை அத்துமீறி நடந்து கொண்டிருக்கின்றன. தங்கள் பகுதி வழியாக அமெரிக்கப் படைகள் செல்லப்போவதைக் கேள்விப்பட்டவுடன், சிரியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மாகாணமான டேய்ர் அல் ஜாரில் மக்கள் திரண்டு நின்றனர். அமெரிக்கப் படைகள் வந்தவுடன் சாலையை மறித்துக் கொண்டு திரும்பிப் செல்லுமாறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மக்களின் கோபத்தைக் கண்ட அமெரிக்கப் படைகள் வேறு வழியின்றி திரும்பிச் சென்றன.

இதே போன்றதொரு சம்பவம் ஒரு வாரத்திற்கு முன்பாகவும் நடந்தது. வடகிழக்கு மாகாணமான ஹசாகாவின் காமிஷ்லி நகருக்கு அருகில் உள்ள டாம்கியா கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் சிரியப் படைகள் பணியில் ஈடுபட்டிருந்தன. அப்போது ஐந்து அமெரிக்க ராணுவ வாகனங்கள் அங்கு வந்தன. எந்தத் திசையில் இருந்து வந்தார்களோ, அதே திசையில் திரும்பிச் செல்லுமாறு சிரியப் படைகள் உத்தரவிட்டன. மேலும் பொது மக்கள் அங்கு குழுமி விட்டனர். அமெரிக்க வாகனங்கள் திரும்பிச் சென்றன.
அமெரிக்கப் படைகளின் நடமாட்டம் குறித்துக் கருத்துச் சொல்லியுள்ள சிரியா, "சிரியாவின் வளங்களைக் கொள்ளையடிக்கவே அமெரிக்கப் படைகள் சிரியாவுக்கு நுழைந்துள்ளன. எண்ணெய் வளத்தைத் தொடர்ந்து இராக் வழியாகக் கடத்துகிறார்கள். பயங்கரவாதிகள் கைகளில் இந்த எண்ணெய் வளம் விழுந்துவிடக்கூடாது என்பதற்காகத் தங்களை படைகளை நிறுத்தியிருக்கிறோம் என்று அமெரிக்கா சொல்வதில் உண்மையில்லை. எண்ணெய்க் கொள்ளையை நடத்துவதே அமெரிக்கப் படைகள்தான்" என்று கூறியுள்ளது.
சிரியாவில் உள்ள எண்ணெய் வளத்திற்காகவே அமெரிக்கப் படைகள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன என்பதை ஜனாதிபதியாக இருந்தபோதே அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஒப்புக் கொண்டிருந்தார்- இதை அவர் பலமுறை குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். அண்மையில் கூட, சில வாகனங்களில் இராக்கின் குர்திஸ்தான் பகுதி வழியாக சிரியாவின் எண்ணெய் மற்றும் கோதுமையை அமெரிக்கப் படைகள் கடத்திச் சென்றிருக்கிறார்கள். கொள்ளைக்காகப் பயன்படுத்தும் பாதைகளில் இது தொடர்ந்து பயன்படுத்தும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சீனா எதிர்ப்பு
சிரியாவின் தேசிய வளத்தைக் கொள்ளையடிப்பதை அமெரிக்கா நிறுத்தி விட்டு, அந்நாட்டின் இறையாண்மையையும், பிரதேச ஒற்றுமையையும் மதிக்க வேண்டும் என்று சீனா கோரியிருந்ததது. இது குறித்துக் கருத்து தெரிவித்திருந்த சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், "சிரியாவின் வளங்களை அமெரிக்கா கொள்ளையடிப்பது இது முதல்முறையில்லை. ஆனால் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாத நிலைக்கு தற்போது சென்றுவிட்டது" என்றார்.

இராக்கின் எல்லையையொட்டி உள்ள சில பகுதிகளில் அமெரிக்க ஆதரவுப் பிரிவினர் நிர்வாகம் நடக்கிறது. இந்த நிர்வாகத்தின் நடவடிக்கைகள் அப்பகுதி மக்களுக்கு பெரும் தொல்லையாக மாறியுள்ளது. நிர்வாகத்தினர் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில்தான் இந்தப்பகுதிகளில் அத்துமீறி நுழையும் அமெரிக்கப் படைகளை மக்களே விரட்டியடித்து வருகிறார்கள்.